
சிவகுமாரன் நடராஜா
ஆலோசகர், அறம் செய்வோம் இயக்கம்
ஈத்துவக்கும் இன்பம்
*********************************
சிவகுமாரன் நடராஜா,
ஆலோசகர், அறம் செய்வோம் இயக்கம்
அனைத்துக் கொடை நெஞ்சங்களுக்கும் எனது அன்பார்ந்த வணக்கம்.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் (குறள் 228)
பொய்யாமொழிப் புலவர் தமது இந்த வாக்கில், ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈவு இரக்கமற்றவர் பிறருக்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ என்ற வினாவை எழுப்பித் தான தர்மங்கள் செய்யும் மகத்துவத்தை அழகாக உணர்த்துகிறார்.
2024இல் நமது 108 உறுப்பினர்கள் வழங்கிய சந்தா, நன்கொடைவழி பெறப்பட்ட தொகையிலிருந்து RM95 060.80யைக் கல்வி, மருத்துவம், சுயதொழில், அவசர உதவிகள் போன்றவற்றிற்காக நம்மை நாடியவர்களுக்கு வழங்கியுள்ளோம். கடந்த ஆண்டு நூல்கள் வெளியீட்டுத் திட்டம்வழி இயக்கத்திற்கு ரி.ம. 41 445.95யைத் திரட்டியுள்ளோம்.
அதுமட்டுமல்லாமல், சிறப்பு உதவியாக தீபாவளி அன்பளிப்புகள் வழங்குவதோடு எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய மாணவர்களுக்குத் தேர்வுக் கருத்தரங்கை நடத்தியுள்ளோம்.
மேலும், ந.பாலகிருஷ்ணன் (ந.பச்சைபாலன்) தலைமையில் அறம் செய்வோம் செயலவையினர் உதவி தேவைப்படுவோரின் உண்மை நிலையை உறுதிசெய்து அதற்கான உதவிகளை வழங்கி வருகின்றனர். நிதி உதவி பெற்றோரின் தகவல்களைத் திரட்டி முறையாக ஆவணப்படுத்தி வருவது பாராட்டுக்குரியதாகும்.
இனி வரும் ஆண்டுகளில் நமது உதவிகள் இன்னும் விரிவடைந்து, மேலும் பலரைச் சென்றடைய வேண்டும். நம் அறம் செய்வோம் இயக்கம் இப்பொழுது இருப்பதுபோல் கட்டுக்கோப்பாக, ஒருமித்த சமுதாய உணர்வோடு செயல்பட வேண்டும். அறப்பணிகள் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நன்றி, வணக்கம்.
சிவகுமாரன் நடராஜா